திருச்சி | பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 29 பேர் கைது

திருச்சி | பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 29 பேர் கைது
Updated on
1 min read

திருச்சி: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, திருச்சி அருகே கருப்புக் கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 29 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமி நேற்று சேலத்திலிருந்து வாழப்பாடி வழியாக காரில் திருச்சி வந்தார். அவருக்கு துறையூர், உப்பிலியபுரம், கொள்ளிடம், அரியமங்கலம் பால்பண்ணை உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்துக்கு வரும் பழனிசாமிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவருக்கு கருப்புக் கொடிகாட்ட, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் 29 பேர் துறையூரில் முசிறி பிரிவு சாலையில் கருப்புக் கொடியுடன் கூடினர். ஆனால், பழனிசாமி வருவதற்கு முன்னதாகவே 29 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in