Published : 26 Mar 2023 06:15 PM
Last Updated : 26 Mar 2023 06:15 PM

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோயில் குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலில் 15 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அதனையொட்டி முதல்நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை சமேதமாய் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். இவர்களது முன்னிலையில் காலை 8.35 மணியளவில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. பின்பு கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 5 பங்குனி உத்திரத்தன்று பவுர்ணமி பூஜையன்று சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 6ல் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை, ஏப்ரல் 7ம் தேதி இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 8ல் பகல் 12.20 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறும்.

இத்திருக்கல்யாணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி திருக்கல்யாணத்தில் பங்கேற்பர். அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி காலை 6 மணியளவில் கிரிவல வீதியில் தேரோட்டம் நடைபெறும். அடுத்தநாள் ஏப்ரல் 10ம் தேதி தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x