கும்பகோணத்தில் ரயில் மறியல்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மீது வழக்குப் பதிவு

கும்பகோணத்தில் ரயில் மறியல்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் .அழகிரி உள்பட 3 பேர் மீது ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்த ராகுல் காந்திக்கு கடந்த 23-ம் தேதி சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்தது.

இந்தத் தண்டனையை எதிர்த்து சென்னை செல்வதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவருடன் வந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் உள்ளிட்டோர் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ரயில்வே இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 3 பேர் மீது, அனுமதியின்றி கூட்டம் திரட்டி, ரயிலை மறித்தது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in