Published : 16 Sep 2017 10:28 AM
Last Updated : 16 Sep 2017 10:28 AM

பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வழக்கில் திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீராவுக்கு 10 ஆண்டுகள் சிறை: திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

பெண்ணை காதலித்து ஏமாற்றி, பலாத்காரம் செய்த வழக்கில் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் ஆசிக் மீராவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் ஆசிக் மீரா(34). இவர், திருச்சி மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த என்.துர்கேஸ்வரி(32) என்பவர், தன்னை காதலித்து ஏமாற்றி, கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுப்பதாக ஆசிக் மீரா மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது மாமியார் மைமூன் ஷரிபா, நண்பர்கள் சந்திரபாபு என்ற விஎஸ்டி.பாபு, சரவணன் ஆகியோர் மீதும் அளித்த புகாரின்பேரில், பொன்மலை அனைத்து மகளிர் போலீஸார் 2014-ல் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி ஜெஸிந்தா மார்ட்டின் நேற்று தீர்ப்பளித்தார். அதில், ஆசிக் மீராவுக்கு வெவ்வேறு குற்றப் பிரிவுகளில் மொத்தம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனையை 10 ஆண்டுகளில் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிக் மீராவின் மாமியார் மைமூன் ஷரிபாவுக்கு 10 ஆண்டுகள் சிறை, கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும், விஎஸ்டி.பாபு, சரவணன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஆசிக் மீரா உள்ளிட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x