அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு: ஓபிஎஸ் தரப்பில் எழுத்துபூர்வ வாதங்கள் தாக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து நிலுவையில் இருக்கும் மூல வழக்கில்தான் முடிவு செய்ய முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது அதற்கு முரணானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு , எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு மார்ச் 24 காலை வரை அவகாசம் வழங்கி இந்த வழக்குகளின் இடைக்கால கோரிக்கைகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினரின் சார்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இதில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாதங்களை தொகுத்து எழுத்துபூர்வ வாதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து நிலுவையில் இருக்கும் மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது அதற்கு முரணானது என எழுத்துபூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in