Published : 16 Sep 2017 04:10 PM
Last Updated : 16 Sep 2017 04:10 PM
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ல் கூடியது. அதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமும் நடந்தது. இதில் துணை விதிமுறைகளில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சரை துணை புரவலர் ஆக்க முடிவு செய்யப்பட்டது. தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இன்று தேர்தல் காலை 10.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர், பி.மணி, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.
சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர். இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT