

சென்னை: ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு பணிக்குழு மாநாடு சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஜி-20 கூட்டமைப்பு என்பது பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.
இதில் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக அளவில் வலிமையான சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக திகழும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வருகிறது.
ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், சர்வதேச உறவுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் முக்கிய நகரங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கல்வி தொடர்பான மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றன.
இந்நிலையில், ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு பணிக்குழுவின் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) நடைபெறுகிறது.
மத்திய அரசின் நிதி அமைச்சக தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் கூட்டத்துக்கு தலைமை வகிக்கின்றனர். 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள், பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
உணவு, எரிசக்தி, பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம், நிதிப்பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக உறுப்பினர்கள் தங்கள் கொள்கை முடிவு சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஏப்.12, 13-ம் தேதிகளில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் ஜி-20 நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
இம்மாநாடு குறித்து அனந்த நாகேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், "தமிழகத்தின் கலை, பண்பாடு, பாரம்பரியம் குறித்து ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் அறிந்துகொள்ள பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது" என்றார்.
மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை இயக்குநர் ஜிஜேந்திரசிங் ராஜே, மத்திய அரசின் பத்திரிகை தகவல் மைய இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.