Published : 10 Sep 2017 11:06 AM
Last Updated : 10 Sep 2017 11:06 AM

‘தமிழ் பரப்புரை சங்கம்’ ஏற்படுத்தப்படும்: அமைச்சர் க. பாண்டியராஜன் தகவல்

உலகம் முழுவதும் தமிழ் மொழியைப் பரப்ப ‘தமிழ் பரப்புரை சங்கம்’ ஏற்படுத்தப்படும் என தமிழ் ஆட்சிமொழி, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னையில் செயல்பட்டு வரும் எம்.எஸ்.மார்ட்டின் கீ போர்டு இசைப் பள்ளி மற்றும் தமிழக அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை இணைந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கின்னஸ் சாதனைக்காகவும் 440 மாணவர்கள் ஒரே சமயத்தில் கீ போர்டு இசை வாசிக்கும் நிகழ்ச்சியை கடந்த மே மாதம் நடத்தின.

இதற்கான கின்னஸ் சான்றிதழை அமைச்சர் க. பாண்டியராஜன் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக் கலைஞர் எம்.எஸ். மார்ட்டினிடம் வழங்கினார். மேலும் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழுக்கான இருக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தி பிரச்சார சபா போல தமிழ் மொழியைப் பரப்ப ‘தமிழ் பரப்புரை சங்கம்’ ஏற்படுத்தப்படும். அதன் மூலம் தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்படும். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் போல அறிவியல் தமிழ், வணிகத் தமிழை ஆழப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் நிதி

கீழடியில் ஆய்வு செய்ய மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம். தமிழக அரசும் நிதி வழங்கும். தமிழகத்தில் இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணித்தால் அனைத்து இடங்களிலும் அதனை தமிழக அரசு எதிர்க்கும். அதேபோல இந்தி பிரச்சார சபாவுக்கு வழங்கும் அதே நிதியை தமிழ் பரப்புரை சங்கத்துக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அருங்காட்சியகத் துறை இயக்குநர் டி. ஜெகநாதன், கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x