Published : 24 Mar 2023 06:34 AM
Last Updated : 24 Mar 2023 06:34 AM

பெரம்பலூர் | ஆட்சியர் உத்தரவால் இதய நோயாளிக்கு ஒரு மணிநேரத்தில் ரேஷன் கார்டு வழங்கல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சேர்ந்தவர் அருண் சற்குணம்(43). திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு, இதய நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்குச் சென்றபோது, அதிகம் செலவாகும் என தெரியவந்தது.

இதையடுத்து, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடிவு செய்து, காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்தார். ஆனால், அருண் சற்குணத்திடம் ரேஷன் கார்டு இல்லாததால், காப்பீடு அட்டை பெற முடியவில்லை. மேலும், அவரது வீட்டுக்கு அலுவலர்கள் விசாரணைக்குச் சென்றபோது அவர் திருப்பூரில் இருந்தது தெரியவந்ததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற போதிய வசதியின்றி அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், அருண் சற்குணம் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் நேற்று மாலை மனுவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அலுவலகம் வந்த ஆட்சியர் க.கற்பகம், அவரை அழைத்து விசாரித்தார். அதைத்தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஒரு மணி நேரத்தில் அருண் சற்குணத்துக்கு ரேஷன் கார்டு, முதல்வர் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியன வழங்கப்பட்டன. இதை சற்றும் எதிர்பாராத அருண் சற்குணம், கண்ணீர் மல்க ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x