Last Updated : 08 Sep, 2017 05:20 PM

 

Published : 08 Sep 2017 05:20 PM
Last Updated : 08 Sep 2017 05:20 PM

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அனிதா தற்கொலையை அடுத்து தமிழகம் முழுதும் எழுந்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை அமர்வின் முன்னிலையில் நடந்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன் விவரம் வருமாறு:

நீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைமறியல், கடையடைப்பு, உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும்.

எனவே தமிழக அரசு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x