கோவில்பட்டி | பாஜக மாநில நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

கோவில்பட்டியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் பாஜக நிர்வாகி சிவந்தி நாராயணன் வீடு.
கோவில்பட்டியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் பாஜக நிர்வாகி சிவந்தி நாராயணன் வீடு.
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சிவந்தி கே.நாராயணன். இவர் பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். அதேபோல், அரசுத் துறை சார்பில் நடைபெறும் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் ஒப்பந்ததாரரிடம் பணிகளை எடுத்துச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து அமலாக்க துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி உட்பட 3 அதிகாரிகள் சிவந்தி நாராயணன் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது மனைவியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் தொடர்ந்து வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எதற்காக இந்த சோதனை என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர்.

அமலாக்க பிரிவினர் சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பாஜகவினர் சிவந்தி நாராயணன் வீடு முன்பு திரண்டனர். அவர்கள் சோதனை நடத்த வந்த அதிகாரியிடம் பேசினர். ஆனால் அவர்களுக்கும் அதிகாரிகள் தகவல் சொல்ல மறுத்து விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in