Published : 07 Sep 2017 03:44 PM
Last Updated : 07 Sep 2017 03:44 PM

ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!- மு.க.ஸ்டாலின்

ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே என நீட் விவகாரத்தில் ஆசிரியை ராஜினாமாவை குறிப்பிட்டு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தனக்கு அனுமதி அளிக்கப்படாததால், ஆசிரியப் பணியை விழுப்புரம், வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா ராஜினாமா செய்துள்ளார்.

அவரது நிலைப்பாடு குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா. அவரது உணர்வை மதிப்போம்.ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!" எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 1-ம் தேதி (செப்.1) அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடியவர் அனிதா. அவரது மறைவை அடுத்து தமிழகம் முழுதும் இன்று 6-வது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தனக்கு அனுமதி அளிக்கப்படாததால், ஆசிரியப் பணியை ராஜினாமா செய்வதாக விழுப்புரம், வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு அவர் அளித்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், ''சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையைவிட தேசம் முக்கியம் என்பதால் ஆசிரியப் பணியினை ராஜினாமா செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x