Published : 21 Sep 2017 09:03 AM
Last Updated : 21 Sep 2017 09:03 AM

புதிய பென்சன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை: தமிழக அரசின் நிதித்துறை விளக்கம்

புதிய பென்சன் திட்டத்தின் கீழ் அரசு பணியில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதிய விதிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை என தமிழக அரசின் நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பகுதியைச் சேர்ந்த பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் ஓய்வூதியம், பணிக்கொடை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 3 கேள்விகளை தமிழக அரசின் நிதித்துறை பொது தகவல் அதிகாரியிடம் கேட்டிருந்தார். அதன் விவரம் வருமாறு:

1.தமிழக அரசில் 1.4.2003 முதல் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை (கிராஜுவிட்டி) உண்டா?

2. மத்திய அரசில் புதிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பணிக்கொடை வழங்கப்படும் நிலையில், தமிழக அரசு மட்டும் பணிக்கொடை வழங்க மறுப்பது ஏன்?

3. தமிழக அரசு பணியில் புதிய பென்சன் திட்டத்தில் பணியில் சேர்ந்தோருக்கு ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம், மரணத்துக்குப் பின்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழக அரசால் ஓய்வூதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா?

நிதித்துறை விளக்கம்

இந்த 3 கேள்விகள் தொடர்பாக நிதித்துறை அளித்துள்ள பதிலில், "முதல் 2 கேள்விகளுக்கும் தகவல் அளிக்க சட்டத்தில் வழிவகையில்லை. ஓய்வூதியத்தைப் பொறுத்தமட்டில், 1.4.2003-க்கு பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு ஓய்வுக்குப் பின் அல்லது மரணத்துக்கு பின் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழக அரசால் இதுவரை ஓய்வூதிய விதிகள் உருவாக்கப்படவில்லை" என கூறியுள்ளது.

பணிக்கொடை

மத்திய அரசு 1.1.2004 முதல் புதிய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. புதிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x