உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி | தூய்மைப் பணியாளர் தற்கொலை முயற்சி: பதவி உயர்வுக்கு பணம் கேட்கப்பட்டதா? - ஊழியர்கள் போராட்டம்

Published on

தூத்துக்குடி: உடன்குடியில் தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55).இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மைப்பணியாளராக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

பணி மூப்புஅடிப்படையில் தனக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க கோரி சுடலைமாடன், உடன்குடி பேரூராட்சி தலைவரின் உறவினரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை அணுகியுள்ளார்.

அப்போது பதவி உயர்வுக்கு சுடலைமாடனிடம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால் அவரை ஜாதி பெயரை சொல்லி திட்டி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுடலைமாடன் கடந்த 17-ம் தேதி விஷம் குடித்தார். தூத்துக்குடி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடன்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அகற்றி பேரூராட்சி மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கண்ணன், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் ரகுராஜன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். அதன்பின் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆட்சியர் உறுதி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தூய்மைப்பணியாளர் சுடலைமாடனை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் ஆட்சியர் கூறும்போது, “ சுடலைமாடனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை அவதூறாக பேசியதாக முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in