Published : 22 Mar 2023 06:00 AM
Last Updated : 22 Mar 2023 06:00 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மடத்தில் அத்துமீறி நுழைந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக வழக்கறிஞர் டி.எஸ். சங்கரை 3-வது நாளாக தேடும் பணியில் காவல்துறையினர் நேற்றும் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே உள்ளஅம்மணி அம்மன் மடத்தின் 23,800 சதுரடி இடத்தை பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எஸ். சங்கர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அவர் கட்டியிருந்த மாடி வீட்டை இந்து சமய அறநிலையத் துறை மூலம் கடந்த18-ம் தேதி அகற்றப்பட்டது.
மேலும், அம்மணி அம்மன் மடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதற்கு, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தொன்மையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை மீறிய செயல் எனக்கூறி, ஆதரவாளர்களுடன் மடத்தின் இடத்தில் பாஜக வழக்கறிஞர் சங்கர் கடந்த 19-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஆகியோரை மிக கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் கோயில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) வே.குமரேசன் அளித்துள்ள புகாரில், “வட ஒத்தவாடை தெருவில் உள்ள 23,800 சதுரடி இடம், அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமானது. இந்த இடத்தை சட்ட விரோதமாக டி.எஸ். சங்கர் ஆக்கிரமித்திருந்தார். அவரது மாடி வீடு, கடந்த 18-ம் தேதி அகற்றப்பட்டது.
இந்நிலையில் டி.எஸ். சங்கர், செங்கம் அஜித்குமார், கீழ்நாத்தூர் வெங்கடேசன், தேனிமலை காளியப்பன், கார்த்தி, ஏழுமலை உள்ளிட்டோர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கடந்த 19-ம் தேதி நுழைந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து நிறுத்தினர்.
மேலும் துறை ஊழியர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மேலும், அங்கு நடப்பட்டியிருந்த எல்லை கல்லை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்பேரில் திருவண்ணாமலை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜக வழக்கறிஞர் டி.எஸ். சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இதில், தேனிமலையில் வசிக்கும் காளியப்பன், ஏழுமலை, கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், வழக்கறிஞர் சங்கரை பிடிக்கும் முயற்சியில் 3-வது நாளாக காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முருகானந்தம் அறிக்கை: இது குறித்து இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் வடக்கு கோபுரத்தை கட்டியவர் தெய்வத் திரு அம்மணி அம்மாள். அண்ணாமலையாரின் பூரண அருள் பெற்றவர். இவரது ஜீவ சமாதியும், மடமும் சிறிய கோயிலை போல், வடக்கு கோபுரம் அருகே உள்ளன.
இந்த மடம், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது. அறக்கட்டளை மூலம் நிர்வாகம் செய்து வருகின்றனர். இவர்கள், பெங்களூருவில் இருக்கின்றனர். அம்மணி அம்மன் மடம், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது அல்ல. மடத்தை பராமரித்து வந்தவர், மடத்தை கைப்பற்றி அனுபவித்து வந்தார். உரிமையும் கொண்டாடினார்.
இந்து முன்னணி பேரியக்கத்தின் கவுரவத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், மடத்தின் டிரஸ்டியாக 30 ஆண்டுகள் போராடி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மீட்டெடுத்தார். இவர், தற்போது உயிருடன் இல்லை. அறக்கட்டளையின் ஒரு நிர்வாகியாக இந்து முன்னணி சேர்க்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்றது.
அம்மணிஅம்மன் மடத்தை திருவண்ணாமலையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஆக்கிரமிக்க முயற்சி செய்தார். அவரது முயற்சியை இந்து முன்னணி முறியடித்தது. மேலும், மற்றொரு முக்கிய புள்ளியும் ஆக்கிரமிக்க முயன்றபோது, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டதால், மடத்தை கையகப்படுத்தும் முடிவை கைவிட்டார்.
சுயநலத்துக்காக மடத்தின் நிர்வாகிகளை ஏமாற்றி வழக்கறிஞர் டிஎஸ் சங்கர் வீடு கட்டி கொண்டார். அவரது தவறை இந்து முன்னணி சுட்டிக் காட்டியபோது திருத்திக் கொள்ளவில்லை. இதனால், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பில் இருந்து சங்கர் நீக்கப்பட்டார்.
சங்கரின் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றியதை இந்து முன்னணி மனப்பூர்வமாக பாராட்டுகிறது. இந்த மடத்தின் தொன்மையை காப்பாற்ற வேண்டும் என நீதிபதிகள் மகாதேசன், ஆதி கேசவன் அமர்வு தீர்ப்பின்படி, அம்மணி அம்மன் பழமையான கோயிலை பாதுகாக்க வேண்டியது அவசியம். மடத்தின் வரலாறு தெரியாமலும், பெருமை தெரியாமலும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கை விடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
அம்மணி அம்மன் மடத்தின் 23,800 சதுரடி இடத்தை வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அவர் கட்டியிருந்த மாடி வீட்டை இந்து சமய அறநிலையத் துறை மூலம் கடந்த18-ம் தேதி அகற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT