Last Updated : 21 Mar, 2023 03:23 PM

 

Published : 21 Mar 2023 03:23 PM
Last Updated : 21 Mar 2023 03:23 PM

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு: கலக்கத்தில் அலுவலர்கள்

விருதுநகர்: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நேற்று நள்ளிரவு திடீர் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அரசு அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வீ.ப.ஜெயசீலன் கடந்த மாதம் 8-ம் தேதி பொறுப்பேற்றார். அதன்பின், தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு திட்டப் பணிகள், வளர்ச்சிப் பணிகள், நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதிகாலையிலேயே ஆய்வுப் பணிகளை தொடங்கி பார்வையிட்டு வரும் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நேற்று நள்ளிரவு காரியாபட்டியில் உள்ள வட்டார அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காரியாபட்டியில் உள்ள வட்டார மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் சிகிச்சை அளிப்பதில் குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். அதோடு, எக்ஸ்-ரே, ஸ்கேன் வசதிகள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் பலர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் மதுரை அரசு மருத்துவமனைக்குமே அனுப்பிவைக்கப்பட்டு வரும் சூழலும் உள்ளது.

அதோடு, மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பலத்த காயத்துடன் சிகிச்சை வருவதும் உண்டு. ஆனால், இரவு நேரத்தில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை அளிக்க காரியாபட்டி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செலிவியர்கள் இருப்பதில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் திடீர் ஆய்வு நடத்தினார்.

நள்ளிரவு சுமார் 11.30 முதல் 12 மணி வரை இந்த ஆய்வு நீடித்தது. அப்போது, உள்நோயாளிகள் எண்ணிக்கை, புற நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்தும், மருத்துவமனைக்கான தேவைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து, சிகிச்சை அளிக்கும் முறைகள், மருத்துவ வசதிகள் குறித்து நோயாளிகளிடமும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியரின் நள்ளிரவு திடீர் ஆய்வால் மருத்துவத் துறையினர் மட்டுமின்றி பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x