

மதுரை: தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,500 கோடி அறிவிக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் மதுரை மாநகர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என வர்த்தகம் மற்றும் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரு வழித் தடங்களில் 54 கி. மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் செயல்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என மதுரையில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசும் இதில் ஆர்வம் காட்டியது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறு களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்தது.
இதற்கான அறிக்கையை அந்நிறுவனம் தமிழக அரசிடம் வழங்கிய நிலையில், அரசு அறி வுறுத்தலின்பேரில், முதல்கட்டமாக 18 நிறுத்தங்களுடன் 31 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ வழித்தடம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
இதன்படி, திருமங்கலம்- ஒத்தக்கடை இடையே கப்பலூர், தருமத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்த நகர், மதுரை கல்லூரி, மதுரை ரயில் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அழகர்கோயில் சாலையிலுள்ள காவல் ஆணையர் அலுவலகம், கோ புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகிய இடங்களில் நிறுத்தம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
இந்த இடங்களில் சிறிய அளவிலான பயணிகள் ரயில் நிலையங்களை அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.8,500 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மதுரையில் நிலவும் போக்குவரத்து நெரி சலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை வர்த்தகர்கள், பொது மக்கள் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தென்னக ரயில் பயணிகள் சங்க பொதுச் செயலர் பத்மநாதன் கூறியது: நீண்ட நாள் கோரிக்கையான திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே 18 நிறுத்தங்களுடன் கூடிய ரயில் திட்டம் மூலம் மதுரை மக்கள் மிகவும் பயன்பெறுவர். லட்சக்கணக்கானோர் பயணிக்க வாய்ப்புள்ளது. பயண நேரம், செலவு குறையும்.
மாற்றுத்திறனாளி, முதியோர் மற்றும் அதிகமாக பயன்படுத்தும் தொழிலாளர்கள், மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். இத்திட்டத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியது: 18 மாதங்களில் இப்பணி முடி யும் என்கின்றனர். இதன்மூலம் மதுரையில் போக்குவரத்து நெருக் கடிக்கு தீர்வு கிடைக்கும். கட்டுமானத் தொழிலாளர், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பயன்பெறுவர். அடுத்த இருகட்ட மெட்ரோ ரயில் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.