Published : 19 Mar 2023 04:06 AM
Last Updated : 19 Mar 2023 04:06 AM

தமிழகத்தில் 4 நாள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் பரவலாக கோடை மழை தொடங்கிய நிலையில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி (இன்று) ஒருசில இடங்களிலும், 20, 21-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

18-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 9 செ.மீ. முகலிவாக்கம், கோடம்பாக்கம், சென்னை விமான நிலையத்தில் 7 செ.மீ. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சென்னை தரமணி, காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x