Published : 25 Sep 2017 05:15 PM
Last Updated : 25 Sep 2017 05:15 PM

சாந்தோமில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை திருட்டு: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய திருடன்

சாந்தோமில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகையை திருடிய ஆசாமி கண்காணிப்பு கேமராவில் சிக்கினார். கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை சாந்தோம் முத்து தெருவில் வசிப்பவர் மெட்டி(50). இவர் கணவர் வங்கி ஊழியர். அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று மதியம் மெட்டி வீட்டை பூட்டிவிட்டு மாலை 5 மணி அளவில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த 50 சவரன் நகை திருடப்பட்டது தெரிய வந்தது.

மெட்டி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். இது பற்றி மெட்டி மைலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

திருட்டு நடந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் கண்காணிப்புக் கேமரா இருப்பதை பார்த்த போலீஸார் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை எடுத்து ஆராய்ந்தனர். அதில் மெட்டி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற சிறிது நேரத்தில் அங்கு வரும் ஒரு நபர் மெட்டியின் வீட்டை நோட்டமிட்டு வெளிப்புற சுவரை ஏறி குதித்து உள்ளே செல்வதும் பின்னர் பத்தே நிமிடத்தில் ஒரு பையுடன் மீண்டும் அதே போன்று சுவரேறி குதித்து வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது.

ஜீன்ஸ் பேன்ட்டும், டி ஷர்ட்டும் அணிந்திருந்த நபர் நடந்தே வந்து திருடிவிட்டு பொறுமையாக சாந்தோம் நோக்கி நடந்து செல்கிறார். அவரது அங்க அடையாளங்களை வைத்து போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x