Published : 08 Sep 2017 11:16 AM
Last Updated : 08 Sep 2017 11:16 AM
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று அதிமுகவைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற துணை சபாநாயருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால் கோள் நடும் விழாவை தம்பிதுரை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை, ''நீட் தேர்வு தமிழகத்துக்குத் தேவையற்ற ஒன்று. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
'அதிமுகவில் பிளவு இல்லை'
அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. முதல்வர் பழனிசாமி கருத்து வேறுபாடுகளைக் களைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
திமுகவில் ஸ்டாலின், அழகிரி மற்றும் கனிமொழியிடம் கருத்து வேறுபாடுகள் இல்லை.
ஜாக்டோ - ஜியோ அமைப்புகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதால் அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.
‘பெரும்பான்மையுடன் உள்ளோம்’
அ.தி.மு.க. பெரும்பான்மையுடன் உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றால்தான்பெரும்பான்மை இல்லை என்று கூறமுடியும். அதனால் நாங்கள் பெரும்பான்மையுடனே தான் இருக்கிறோம்'' என்றார் தம்பிதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT