Published : 17 Mar 2023 04:35 PM
Last Updated : 17 Mar 2023 04:35 PM

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகாரில் நடவடிக்கை என்ன? - காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிரான புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்என்எஸ் உட்பட பல நிதி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி சுமார் 15,000 கோடி ரூபாயை வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர். இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த அரசாங்கம் எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை என்பதாலும், தனியார் வங்கிகளும் இதற்கு உடந்தையாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்களது கருப்பு பணத்தை முதலீடு செய்கின்றனர்.

ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே முதலீட்டாளர்களுக்கு வட்டி பணத்தை கொடுக்கும் நிறுவனங்கள் பின்னர் நஷ்ட கணக்கை காட்டி, நிறுவனங்களை மூடிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பித்துவிடுகின்றனர். இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்த நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு, தங்களது பணத்தை திரும்ப பெற முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

எனவே, முதலீட்டாளர்களிடம் தங்களது பணத்தை இழந்தது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வழக்குகள் விசாரிக்கபட வேண்டும். மேலும், மக்களை ஏமாற்றிய முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல் துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்கள் மீதான புகார் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து விரிவான மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x