

சென்னை: தமிழக ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம், மாண்டல பகுதியில் நேற்று (மார்ச் 16) நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில், தமிழகத்தின் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இராணுவ வீரர் மேஜர் ஜெயந்துக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக இராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.