Published : 17 Mar 2023 01:44 PM
Last Updated : 17 Mar 2023 01:44 PM

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வு - பெட்டி நிறைய ஆவணங்களை எடுத்துச் சென்ற போலீஸார்

கும்பகோணம்: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர்.

கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ் (53). இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன் (50), இவர்கள் 2 பேரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

மேலும், ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து கும்பகோணம் பகுதியிலுள்ள ஏராளமானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு பாெருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் 2 பேர் உள்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5- ம் தேதி எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். அதற்கு முன்பாக மற்ற 5 பேரை கைது செய்தனர்.

தற்போது அனைவரும் ஜாமினில் வெளியில் உள்ள நிலையில், எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரது வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்ய பாெருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்றும் இன்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கும்பகோணத்தில் உள்ள கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி வங்கியின் 2 கிளைகளில் அவர்களது பெயர்களில் உள்ள கணக்குகள், நகைகள் உள்ளிட்டவை குறித்து பாெருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி முத்துக்குமார், காவல் ஆய்வாளர் ஆர்.சுதா மற்றும் 6 போலீஸார் ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்களை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸார் கூறியது, “எம்.ஆர்.கணேஷ் மற்றும் அவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகிய 2 பேர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்ததால், கும்பகோணம் பெரிய கடைத்தெருவிலுள்ள கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் பெசன்ட் சாலையிலுள்ள அந்த வங்கியின் கிளை அலுவலகங்களில் நேற்றும் இன்றும் அவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் பெயர்களிலுள்ள வரவு செலவு கணக்குகள், நகைகள், மதிப்புள்ள பொருட்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வின்போது, சுவாமிநாதன், அவரது தாயார் வேதவள்ளி மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் உடனிருந்தனர். ஆவணங்களை மதுரையிலுள்ள முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் விரைவில் ஒப்படைக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x