பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் - அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

பாஜக தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்
பாஜக தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திறனற்ற திமுக அரசு 'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?

பால் உற்பத்தியாளர்கள், 'ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்' என்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவன பால் நுகர்வோர்களுக்கு, பத்து லட்சம் லிட்டர் அளவில், ஆவின் பால் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in