தமிழகத்தின் பல பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

சாலையில் பாலைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள்
சாலையில் பாலைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள்
Updated on
1 min read

சென்னை: பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மேலும், இன்று (மார்ச்17) முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து நேற்று (மார்ச் 16) பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று முதல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் நல சங்கம் அறிவித்தது. இதன்படி பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வாங்குவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு அடுத்த நசியனூரில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர். மேலும் கறவை மாடுகளுடன் வந்து சாலையில் பாலைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களால் ஆவின் பால் விநியோகம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in