Published : 14 Sep 2017 09:29 AM
Last Updated : 14 Sep 2017 09:29 AM

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்சன் திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், இவற்றுக்குரிய அகவிலைப்படி (டி.ஏ.) ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை அரசு தன் பங்கிற்கு செலுத்துகிறது. இவ்வாறு சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் வழங்கப்பட்டுவிடும்.

எஞ்சிய 40 சதவீத தொகை பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.

புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

பழைய பென்சன் திட்டப்படி, அரசு ஊழியர் ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர் முழு ஓய்வூதியம் பெறலாம். முழு ஓய்வூதியம் என்பது அவர் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அதற்கு உரிய அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது. 30 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதிய தொகை நிர்ணயிக்கப்படும். இதற்கென தனி கணக்கீடு உள்ளது.

புதிய பென்சன் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியத்தொகை கிடைக்கும் என்று வரையறுக்க இயலாது. ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் பலனை பொருத்தது. பணிக்கொடை (கிராஜுவிட்டி), சிபிஎப் தொகையில் கடன் மற்றும் முன்பணம் பெறும் வசதி, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு இவை எதுவும் கிடையாது என்பதால்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x