Published : 17 Mar 2023 03:47 AM
Last Updated : 17 Mar 2023 03:47 AM

தனுஷ்கோடி - தலைமன்னார் - தனுஷ்கோடி: பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடந்த முதல் பெண்

நீச்சல் வீராங்கணை சுஜேத்தா தேப் பர்மன்

ராமேசுவரம்: தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக் ஜலசந்தி கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற என்ற சாதனையை பெங்களூரைச் சேர்ந்த சுஜேத்தா தேப் பர்மன் (40) படைத்துள்ளார்.

பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேசுவரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் இதுவே ஆகும்.

இதுவரை 4 பெண்கள் உள்பட 18 பேர் பாக் ஜலசந்தியை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கோ நீந்திச் சென்றவர்கள். இதுதவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மராத்தான் முறையிலும் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்துள்ளனர்.

ஆனால், ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மறுபுறத்தை அடைந்த பின்பு தொடர்ச்சியாக மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தொடங்கிய இடத்துக்கே வந்து சாதனை புரிந்தவர்கள் 3 பேர் மட்டுமே. அதில் முதலாமானவர், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்தன். இவர் 1971-ம் ஆண்டு தலைமன்னாரிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு நீந்திச் சென்றார். மொத்தம் தூரத்தை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். அதன்பின்பு இதே சாதனையை 11.4.2021-ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர 28 மணி 19 நிமிடங்களில் நிகழ்த்தினார். கடந்த 29.03.2022 அன்று தேனியைச் சேர்ந்த பள்ளி மாணவரான சினேகன் தனது 14வது வயதில் 19 மணி நேரம் 45 நிமிடத்தில் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி சாதனை படைத்தார்.

முன்னதாக பெங்களூரை சேர்ந்த தொழில்முறை நீச்சல் வீராங்கணையான சுஜேத்தா தேப் பர்மன் (40) தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் நீந்தி சென்று அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு வரையிலும் உள்ள பாக் ஜலசந்தி கடற்பரப்பினை இருபுறமாக நீந்தி கடப்பதற்கான சாதனையை முன்னெடுத்தார். இவர் கடந்த 23.03.2022 காலை 8.23 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து நீந்த துவங்கி 10 மணி 9 நிமிடங்கள் நீந்தி அன்று மாலை 6:33 மணியளவில் ஒருபுறமாக நீந்தி இலங்கையில் உள்ள தலைமன்னாரை அடைந்தார்.

தொடர்ந்து அங்கிருந்து மறுபுறமாக தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்துக் கொண்டு வரும்போது 24.03.2022 அதிகாலை 2:09 மணியளவில் சர்வதேச கடற்பரப்பை தாண்டி நீந்தி வரும்போது ஜெல்லி மீன்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் நீச்சலை முடித்தார். மீண்டும் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் நீந்தி சென்று அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி வருவதற்கு சுஜேத்தா தேப் பர்மன் இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

அனுமதி கிடைத்த நிலையில், ஜேத்தா தேப் பர்மன் புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் தனுஷ்கோடி பழைய துறைமுகத்திலிருந்து நீந்த துவங்கி 12 மணி 15 நிமிடங்கள் நீந்தி வியாழக்கிமை அதிகாலை 5.00 மணியளவில் ஒருபுறமாக நீந்தி இலங்கையில் உள்ள தலைமன்னாரை அடைந்தார். தொடர்ந்து உடனே மறுபுறமாக தலைமன்னரிலருந்து மீண்டும் தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி வியாழக்கிழமை பகல் 12.20 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனையை நீந்தி கரையை அடைந்தார். இந்த சாதனைக்காக 19 மணி 31 நிமிடங்கள் ஜேத்தா தேப் பர்மன் எடுத்துக் கொண்டார்.

இதன் மூலம் முதன்முறையாக தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு இரண்டு முறை நீந்தி கடந்தவர் என்ற சாதனையையும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக் ஜலசந்தி கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற சாதனையையும் சுஜேத்தா தேப் பர்மன் படைத்தார். மேலும் தேனியைச் சேர்ந்த சினேகனின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

முன்னதாக சுஜேத்தா தேப் பர்மன் இந்தியன் எலைட் மாரத்தான் நீச்சல் போட்டியில் கலந்து 81 கிலோ மீட்டர் தூரத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் வொர்லி முதல் மும்பையில் உள்ள கேட் வே ஆப் இந்தியா வரையான 36 கிலோ மீட்டர் கடல் பகுதியையும் நீந்தி கடந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x