திருச்சியில் திமுகவினர் இடையே மோதல்: அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட்

அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டும் திருச்சி சிவா ஆதரவாளர்கள்
அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டும் திருச்சி சிவா ஆதரவாளர்கள்
Updated on
1 min read

சென்னை: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரத்தில், திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நேருவின் ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருச்சி மாநகராட்சியால் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.31 லட்சம் செலவில் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைக்க சென்றபோது, கல்வெட்டு, பதாகையில் எம்பி திருச்சி சிவாவின் பெயர், படம் இடம் பெறவில்லை. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டினார்.

இதனால், ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அமைச்சருக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தும் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த முழு விவரம் > அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடி; திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் - திருச்சியில் பரபரப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in