Published : 25 Sep 2017 10:02 AM
Last Updated : 25 Sep 2017 10:02 AM
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
அதிமுகவின் இரட்டை சிலை சின்னம் மற்றும் கொடிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 6-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.
அந்த விசாரணையின்போது விருப்பம் இருந்தால் நேரில் ஆஜராகலாம் என தேர்தல் ஆணையம் எனக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் பிரமாணப் பத்திரங்களை வரும் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எனவே, வரும் 6-ம் தேதி டெல்லி சென்று விசாரணையில் பங்கேற்க உள்ளேன். மேலும், கூடுதல் பிரமாணப் பத்திரங்களை இன்னும் சில நாட்களுக்குள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். எங்களது பூர்வீக சொத்துகளை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தை நான் தேடிப் போகவில்லை. அவர்தான் என்னைத் தேடி வந்தார். இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன்.
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக டிடிவி தினகரன் தற்போது கூறுகிறார். 8 மாதமாக அந்த ஆவணத்தை எங்கே மறைத்து வைத்திருந்தார். ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட அனைத்து சிசிடிவி ஆதாரங்களையும் அவர் வெளியிட வேண்டும். இவ்வாறு தீபா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT