Last Updated : 12 Mar, 2023 05:54 PM

 

Published : 12 Mar 2023 05:54 PM
Last Updated : 12 Mar 2023 05:54 PM

சதுரகிரி மலைப்பாதையில் காட்டாறுகளின் குறுக்கே 7 இடங்களில் இரும்புப் பாலங்கள்: விரைவில் தொடங்கும் பணி

விருதுநகர்: பக்தர்கள் வசதிக்காக சதுரகிரி மலைப் பாதையில் காட்டாறுகளின் குறுக்கே 7 இடங்களில் இரும்புப் பாலங்களும், அன்னதானக் கூடமும் ரூ.4.95 கோடியில் கட்டப்பட உள்ளன.

விருதுநகர் - மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பக்தர்கள் உயிரிழந்தனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அதன்பின், சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது, அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாள்களை ஒட்டிய 4 நாள்கள் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்திலும் திடீர் மழை, பருவநிலை மாற்றம் மற்றும் காட்டாறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு போன்ற சூழ்நிலைகளில் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். இதனால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலுருந்து வரும் பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்படும். இதனால், சதுரகிரி மலைப் பாதையில் உள்ள காட்டாறுகளையும் ஓடைகளையும் பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்துசெல்லும் வகையில் பாலங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சதுரகிரி மலைப் பாதையில் 7 இடங்களில் காட்டாறுகளின் குறுக்கே இரும்புப் பாலமும், சதுரகிரி மலையில் அன்னதானக் கூடமும் அமைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சதுரகிரி மலைப் பாதையில் உள்ள மாங்கனி ஓடையில் ரூ.65.46 லட்சத்திலும், எலும்பு ஓடைப் பகுதியில் ரூ.54.93 லட்சம் மதிப்பிலும், சங்கிலிப் பாறை ஓடை பகுதியில் ரூ.79.57 லட்சம் மதிப்பிலும், பிளாவடிக் கருப்பு கோயில் பகுதியில் ரூ.73.60 லட்சம் மதிப்பிலும், வெள்ளைப்பாறை ஓடைப் பகுதியில் ரூ.60.63 லட்சம் மதிப்பிலும், சுந்தரமகாலிங்கம் கோயில் சன்னதி நுழைவாயில் முன்பு உள்ள ஓடைப் பகுதியில் ரூ.43.78 லட்சம் மதிப்பிலும், முன் மண்டபம் அருகே உள்ள ஓடைப் பகுதியில் ரூ.64.86 லட்சம் மதிப்பிலும் இரும்புப் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதோடு, கோயில் பகுதியில் ரூ.52.51 லட்சத்தில் புதிதாக அன்னதானக் கூடமும் என மொத்தம் ரூ.4,95,36,902 மதிப்பில் கட்டப்பட உள்ளன. மேலும், இப்பணிகளை தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் முடிக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணிகளை விரைந்து முடித்து சதுரகிரி மலைக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்றுவர அனுமதியளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x