மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப்படம்
ராமதாஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மீனவர்கள் அவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in