

முதல்வர் பதவி என்ன மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொம்மையா என்று நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
"விரைவில் அரசியலுக்கு வருவேன் தேவைப்பட்டால் முதல்வராகவும் தயார்" என அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல் பேட்டியளித்திருந்தார். இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "முதல்வர் பதவி என்ன மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொம்மையா? 100 நாட்களில் முதல்வராவேன் என்று ட்விட்டரில் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் முதல்வராகிவிட முடியாது. மக்களோடு மக்களாக இருந்து இயங்கினாலே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தார். ஆனால், அவரால் எம்.எல்.ஏ.,கூட ஆக முடியவில்லை. எனவே, கூட்டத்தை வைத்து அரசியலை கணிக்க முடியாது. கூட்டம் எல்லாம் வாக்காக மாற வேண்டும். அதற்கு மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றால் மட்டுமே முதல்வராக முடியும். கமல்ஹாசன் முதலில் எம்.எல்.ஏ., ஆகட்டும். அதன்பிறகு முதல்வராகலாம்" என்றார்.
மக்கள் ஒத்துழைப்பு தேவை:
டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு, "டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. நன்னீரில் மட்டுமே டெங்கு கொசு வளர்கிறது. டெங்குவை ஒழிக்க அரசுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
விரைவில் விசாரணைக் கமிஷன்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவரை யாரும் பார்க்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது தொடர்பான கேள்விக்கு, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக முதல்வர் விசாரணை கமிஷன் அறிவித்துள்ளார். அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நீதிபதி அறிவிக்கப்படுவார். விசாரணை கமிஷன் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" எனக் கூறினார்.