Published : 09 Sep 2017 08:07 AM
Last Updated : 09 Sep 2017 08:07 AM

ஆர்டிஓ அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் (ஆர்டிஓக்கள்) வழக்கம் போல் இன்று செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை இன்று (9-ம் தேதி) முதல் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆர்டிஓ.க்களிலும் கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் புதுப்பிப்பது, பழகுநர் உரிமம் பெற பல ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். மக்கள் பயன்பெறும் வகையில் இன்று (சனிக்கிழமை) அனைத்து ஆர்டிஓ.க்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பயன்

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் இன்று (9-ம் தேதி) வேலை நாளாக இயங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் நகல் ஓட்டுநர் உரிமம் வழங்குதல் ஆகிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் தொடர்பான சேவைகளைப் பெற விரும்புவோர் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x