Published : 09 Sep 2017 09:13 AM
Last Updated : 09 Sep 2017 09:13 AM

கணவனின் கூடா நட்பால் மனைவி தற்கொலை: மரண வாக்குமூலத்தை வயிற்றில் எழுதி வைத்தார்

கணவனின் கூடா நட்பு காரணமாக மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

மணலி அண்ணா நகரைச் சேர்ந்தவர் டார்வின் (32). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனி 29-வது தெருவை சேர்ந்த தேவி என்பவருக்கும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் டார்வினுக்கும், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தேவிக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தேவிக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் வாங்கி வரும்படி டார்வின் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை கணவன் - மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு டார்வின் வேலைக்கு சென்றுவிட்டார். மன வேதனையில் இருந்த, தேவி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மணலி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் தேவியின் உடலைக் கைப்பற்றிய போது, அவர் தனது வயிற்றில் பேனாவால் மரண வாக்குமூலம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது சாவுக்கு கணவர், மாமனார் பிச்சையன், மாமியார் வசந்தா ஆகியோர் தான் காரணம் என்று எழுதியிருந்தார்.

மேலும், அவர்கள் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி 9 பக்க கடிதம் எழுதி கட்டிலுக்கு அடியில் வைத்திருப்பதாகவும் வயிற்றில் எழுதி இருந்தார். இதையடுத்து அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். தேவி தனது மரண வாக்குமூலத்தை, வீடியோ எடுத்து, அதை, தனது அண்ணன்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து டார்வின், அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x