அறங்காவலர்கள் தேர்வு: ஒரே மாதிரியான விண்ணப்பங்களை பதிவேற்ற அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கோயில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கு ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டுமென அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக 23 மாவட்டங்களில், மாவட்ட அளவில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், "அந்த விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறவில்லை" என புகார் தெரிவித்தார். அதற்கு, "ஆன்லைன் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெற்றுள்ளது" என்று அறநிலையத் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பழைய விண்ணப்ப படிவங்களை நீக்க வேண்டும். அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த பணியை நாளையே (மார்ச் 11) முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in