Published : 19 Sep 2017 06:26 AM
Last Updated : 19 Sep 2017 06:26 AM
சென்னை ஓட்டேரியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவரை டெல்லி என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுப்போம் என 2014-ல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அப்போதைய தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து 2014-டிசம்பரில் ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் நடமாட்டம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் பதுங்கி இருந்த சுபஹனி காஜா மொய்தீன், சென்னை கொட்டிவாக்கத்தில் பதுங்கியிருந்த சுவாலிக் முகம்மது என்ற யூசுப் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர்.
ரகசியமாக விசாரணை
இருவரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவாகி இருந்த எண்களை பட்டியலிட்டு, சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் இவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிந்தது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் காஜா மொய்தீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிந்தது. அவரை பிடிக்க கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை வந்த டெல்லி என்ஐஏ அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவில் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். சென்னை கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் ஆயுதப்பயிற்சி
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டி கொடுக்கும் வேலைகளை சாகுல் ஹமீது செய்து வந்திருக்கிறார். இவர் துபாயில் ஆயுதப்பயிற்சி பெற்றிருக்கலாம் என்று என்ஐஏ அதிகாரிகள் சந்தேகப்படுகின் றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் சேர்ந்து போரிடுவதற்காக சிரியா வழியாக ஈராக் செல்ல முயன்றபோது, சிரியா ராணுவ அதிகாரிகள் சாகுல் ஹமீதை பிடித்து இந்தியாவுக்கு அனுப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகுல்ஹமீதை இன்று டெல்லி அழைத்து செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள் ளனர். அங்கு நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT