Published : 20 Sep 2017 08:37 AM
Last Updated : 20 Sep 2017 08:37 AM
தமிழக அரசியல் சூழல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார்.
தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பின், பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதில் எஸ்.டி.கே.ஜக்கையன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்தார். மீதமுள்ள 18 பேரையும் பேரவைத்தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.
இதைத் தொடர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு பேரவைச் செயலாளர் பூபதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று முன்தினம், மும்பையில் இருந்து டெல்லி சென்றார். அங்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து, தமிழக நிலவரம் குறித்து ஆலோசித்தார்.
நேற்று காலை மீண்டும் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், அங்கிருந்து நேரடியாக சென்னை வந்தார். மாலை 5 மணிக்கு ஆளுநரை முதல்வர் கே.பழனிசாமி சந்திக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால், அதுபோன்ற சந்திப்பு நிகழவில்லை. பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 20-ம் தேதி (இன்று) வரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து, ஓரிரு தினங்களில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT