

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியபோது, செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கே.எஸ்.தென்னரசு அதிமுக வேட்பாளராக தேர்வு பெற்று அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர் செந்தில் முருகன் தனது மனுவை திரும்பப் பெறுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எனினும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு முன்பே, பரிசீலனையின்போதே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்.9) அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் செல்வத்தால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், ஓ. பன்னீர்செல்வத்தல், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தெற்கு ஒன்றியச் செயலாளராக அறிவிக்கப்பட்ட தளவை சுந்தர்ராஜ் ஆகியோர் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.