Published : 08 Mar 2023 09:26 PM
Last Updated : 08 Mar 2023 09:26 PM

கருணை அடிப்படையிலான பணிகளைப் பெற திருமணமான மகள்களுக்கு உரிமை: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

கோப்புப்படம்

சென்னை: கருணை அடிப்படையிலான வேலையை பெற திருமணமான மகள்களுக்கும் உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு அந்தப் பணியை வழங்கக் கோரி அவரது மகள் சரஸ்வதி, அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் விண்ணப்பித்தார்.

ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்துள்ளதாக கூறி, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துள்ள போதும், திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிமையில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சத்துணவு திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பிக்க எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.

மணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோர உரிமையில்லை என்ற கர்நாடக அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை வழங்கவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x