“அரசியலில் அண்ணாமலை எல்கேஜி” - தமிழக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கருத்து

வசீகரன் | கோப்புப் படம்
வசீகரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

கும்பகோணம்: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியலில் எல்கேஜி” என்று தமிழக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் எஸ்.ஏ.என்.வசீகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டனர். மக்களைப் பிளவுபடுத்தும் பழக்கம்தான் அவர்களிடம் உள்ளது. அந்த வேலையில் அண்ணாமலை இறங்கியுள்ளார். பாஜகவால் இறக்குமதி செய்யப்பட்ட நபர் அண்ணாமலை. அரசியலில் அவர் எல்கேஜி தான்.

தமிழக தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அண்ணாமலை சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு, வேலை வாய்ப்பு குறித்த எந்த விஷயத்தையும் பேச மாட்டார். ஏதாவது கோயில் பிரச்சனை என்றால் பேசுவார். கடவுள்தான் மக்களை காப்பதுவதாக நினைத்து வருகிறார்கள். ஆனால், பாஜகவும், அண்ணாமலையையும் தான் கடவுளையே காப்பாற்றுவதாக பேசி வருகிறார்கள்.

பாஜக வேரோடு அகற்றப்பட வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. காங்கிரஸை ஆம் ஆத்மி தோற்கடித்து உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்தியாவில் ஆம் ஆத்மி முதன்மையான கட்சியாக வளர்ந்துள்ளது. காங்கிரஸ் தங்கள் பலவீனத்தை ஒத்துக்கொள்ள முடியாமல், ஆம் ஆத்மி கட்சியானது பாஜகவின் பினாமி என தவறாக கூறி வருகிறது.

பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கட்சி என்றால் அது ஆம் ஆத்மிதான். ஆளுநரை வைத்து தமிழகத்தில் தொந்தரவு கொடுப்பது போல், டெல்லியிலும் ஆளுநரை வைத்து பாஜக தொந்தரவு செய்து வருகிறார்கள். இந்தியாவில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு இக்கட்சி உள்ளது. தமிழகத்திற்கு பிழைப்பு நடத்த வரும் கூலி வெளி மாநிலத்தவர்களை எதிர்க்கக் கூடாது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைதான் எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் ஆம் ஆத்மி வெளி மாநில தொழிலாளர்களை எதிர்க்காது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in