

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு செல்லும் வழியில், காவல்கிணறு பகுதியிலுள்ள கையுறை தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு முதல்வர் சென்றார்.
அங்கு பணிபுரியும் பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இங்கு பணிபுரியும் 450 தொழிலாளர்களில், 30 பெண்கள் உட்பட 150 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அவர்களிடம் நலம் விசாரித்த முதல்வர், ‘எத்தனை ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருகிறீர்கள், பணிச்சூழல் எப்படி இருக்கிறது, இங்குள்ள மக்கள் உங்களுடன் நல்ல முறையில் பழகுகிறார்களா, உங்களுக்கு இங்கு ஏதாவது இடர்பாடுகள் இருக்கிறதா?’ என்று கேட்டறிந்தார்.
அப்போது, அந்த தொழிலாளர்கள், இங்கு எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் சொந்த ஊரில் இருப்பது போலவே பாதுகாப்பாக வாழ்வதாக தெரிவித்தனர்.
‘எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம். தமிழ்நாடு அரசு அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை அளித்து வருகிறது’ என்று முதல்வர் அப்போது தெரிவித்தார்.