அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதாந்திர உதவிதொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதாந்திர உதவிதொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவத்தை நேரிலோ, தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள், மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். சென்னை மாவட்டத்தில் உள்ளவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in