திருக்குறள் இன்றைக்கும் பொருள்பட நமக்கு புரிவதால்தான் தமிழ் அழியாமல் உள்ளது: இயக்குநர் கரு.பழனியப்பன் 

உதகையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் பேசும் இயக்குநர் கரு.பழனியப்பன்
உதகையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் பேசும் இயக்குநர் கரு.பழனியப்பன்
Updated on
1 min read

உதகை: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தப்பட்ட திருக்குறளின் பொருள் இன்றைக்கும் நமக்கு புரிகிறது என்பதால்தான் தமிழ் மொழி அழியாமல் உள்ளது என இயக்குநர் கரு. பழனியப்பன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் மெக்கன்ஸ் ஊட்டி ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சரில் ‘குயின்டுபிள்2023’ ஆண்டு கலாச்சார விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டார். மாணவர்களுடன் கலந்துரையாடும் போது அவர் கூறியதாவது: ''தமிழர்கள் 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் என கீழடி அகழாய்வில் தெரிய வருகிறது. அங்கு தோண்டத்தோண்ட தமிழர்களின் நாகரிகம் உலகுக்கு தெரிய வருகிறது. எனவே, தமிழ் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்றைக்கும் பொருள்பட நமக்கு புரிகிறது என்பதே தமிழ் அழியாமல் உயிர்ப்பித்து இருப்பதற்கு சான்று. 700 ஆண்டுகளுக்கு முன் தோன்றி, இன்று உலகம் எங்கும் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தில் உள்ள இலக்கியம் உரை இல்லாமல் புரிந்துக்கொள்ள முடியாது.

உலகிலேயே மொழிக்கு பாடல் உள்ளது தமிழில் தான். தமிழ் தாய் வாழ்த்து. அந்த வாழ்த்தில் 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழை ‘சீரிளமை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலங்களில் அதன் மொழிக்கான பாடல் இல்லை. அதன் சிறப்பை உணர்ந்தவர்கள் தற்போது அந்தந்த மொழிக்கும் பாடல் தேவை என்கின்றனர்.'' இவ்வாறு அவர் கூறினார். மேலும், மெக்கன்ஸ் கல்லூரி ஒரு புகழ்பெற்ற கல்வி வரலாற்றைக் கொண்டிருப்பதாகக் கூறியதுடன், கலாச்சார நிகழ்வுகளில் ஆர்வத்துடன்பங்கேற்றவர்களை பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in