Published : 05 Mar 2023 04:59 PM
Last Updated : 05 Mar 2023 04:59 PM

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தது அதிகார துஷ்பிரயோகம்: தமிழக பாஜக

நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்

சென்னை: "பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பொதுக்கூட்டங்களில் தரமற்ற பேச்சு என திமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், நாம் தமிழர் சீமான், சில அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பேசியுள்ள அனைத்தும் பொது வெளியில் கொட்டிக் கிடக்கின்றன" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பிற மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு வேலை அளிக்கும் தொழில் நிறுவனங்களைக் கண்டித்தும் திமுக கூட்டணி கட்சிகளும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் தொடர்ந்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்தது நாடறிந்தது.

திமுகவின் நிர்வாகிகளும், அமைச்சர்களும் பிற மாநில தொழிலாளர்களை பானிபூரி விற்பவர்கள், காய்ந்த ரொட்டி உண்பவர்கள், கட்டிட கூலிகள் என்றெல்லாம் தரக்குறைவாக, வெறுப்பைக் கொட்டி விமர்சித்து வந்த நிலையில் அவர்களுடைய விமர்சனங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்த அரசு, தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதியளித்து அறிக்கை விட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல வெட்கப்பட வேண்டிய நடவடிக்கையும்கூட.

திமுக ஆதரவு யூடியூப் சேனல்கள் சில திட்டமிட்ட ரீதியில் வட இந்திய தொழிலாளர்கள் மீதான வெறுப்பைக் கொட்டி பிரச்சாரம் செய்தது தமிழக காவல்துறையின் கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டவில்லையா? இருதரப்பினருக்கும் இடையே பகையை உருவாக்கும் செயல்களை அவர்கள் செய்ததாக காவல்துறைக்கு தெரியவில்லையா? பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பொதுக்கூட்டங்களில் தரமற்ற பேச்சு என திமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், நாம் தமிழர் சீமான், சில அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பேசியுள்ள அனைத்தும் பொது வெளியில் கொட்டிக் கிடக்கின்றன.

அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய தமிழக காவல்துறை தற்போது காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை மீது வழக்ககுப்பதிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் பாஜக அஞ்சாது என்பதை தமிழக அரசும், காவல்துறையும் புரிந்துகொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x