Published : 05 Mar 2023 04:04 PM
Last Updated : 05 Mar 2023 04:04 PM

விவசாய மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் உறுதியாக நிறைவேற்றப்படும்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

மதுரை: மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்ட விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிச்சயமாக, படிப்படியாக, உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தொழிற் சங்கங்கள், சிறு மற்றும் குறுந்தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் ஆகியோருடன் நடைபெற்ற கள ஆய்வில் கலந்துகொண்டார்.

இந்தகூட்டத்தில் முதல்வர் பேசியது: "கடந்த பிப்ரவரி மாதம் 2 மண்டலத்தில் அந்த ஆய்வுப் பணியை நாம் முடித்திருக்கிறோம். இப்போது மூன்றாவது மண்டலமாக மதுரை மண்டலத்தில் மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருக்கும் முக்கிய சங்கங்கள், அந்த சங்கங்களின் நிர்வாகிகளிடையே கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்து, வந்திருக்கக்கூடிய உங்களின் கருத்துக்களை இப்போது நாங்கள் கேட்டிருக்கிறோம். நீங்களும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாமல் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு சுருக்கமாக உங்களுடைய கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள், அதே நேரத்தில் சிலர் மனுக்களும் இங்கே தங்திருக்கிறீர்கள்.

குறிப்பாக குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். நிச்சயமாக அதை பரிசீலிப்போம். ஏற்கெனவே தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு முன் அதற்கான தனி ஆலோசனைக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தினோம். அப்படி நடத்தியதற்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக பல மேல் நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது, அது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

அதேபோல, இந்தப்பகுதி விவசாயிகள் சார்பாக சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்தீர்கள். அதை கவனமுடன் நாங்கள் குறித்துவைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை நிச்சயமாக நாங்கள் எடுப்போம். அதேபோல விவசாயிகளுடைய பிரச்சனைகள் பற்றி சொன்னீர்கள், அது, உங்கள் வருமானத்தை பெருக்க வேண்டும். விவசாயிகளுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒரு தனி கொள்கையை நாம் வகுத்திருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

தேர்தல் நேரத்திலேயே ஒரு வாக்குறுதி தந்தோம், திமுக ஆட்சிக்கு வந்தவுடனே விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தயாரித்து வெளியிடுவோம், சட்டமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று சொன்னோம். சொன்ன அந்த அடிப்படையில், சட்டமன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்துவருகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். இப்போதும், வருகிற 20ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு, அடுத்ததாக வேளாண்மைத் துறை பட்ஜெட்டைத் தான் தாக்கல் செய்யப் போகிறோம். வெறும் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்துவிட்டு போய்விட மாட்டோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறபோது, ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட வணிகர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், அனைத்து துறைகளைச் சார்ந்திருக்கின்ற அதிகாரிகளையெல்லாம் அழைத்துப் பேசி, என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம், எதற்கு வரிவிலக்கு அளிக்கலாம், எதற்கெல்லாம் வரிகள் விதிக்கலாம் என்பதையெல்லாம் பற்றி கருத்துக்களைக் கேட்டு, அவர்களுடைய அறிவுரைகளையும் கேட்டு, அந்த அடிப்படையில்தான் பட்ஜெட்டையே தாக்கல் செய்வார். ஆனால் இடையில் அந்த நடைமுறை இல்லை. அது உங்களுக்குத் தெரியும். மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் பணியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

இப்போது விவாசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தயாரிக்கும்போது கூட, அந்தத் துறையின் அமைச்சர், அந்தத் துறையின் அதிகாரிகள், மண்டலம் வாரியாகச் சென்று விவசாய சங்க பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து, கலந்துபேசி அவர்களுடைய கருத்துக்களை கேட்டுத்தான் வேளாண்மைத் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதை நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள். எனவே, இப்போது நீங்கள் வைத்திருக்கக்கூடிய அந்த கோரிக்கைகளையும் நிச்சயமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, தேனி மாவட்ட தோட்டக்கலை பயிர் விவசாயிகள் முக்கியமான கருத்துக்களை, கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறீர்கள். அதையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்கின்ற அந்த உறுதியை அளிக்கிறேன்.அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் அரசு பரிவோடு பரிசீலிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு 5 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களை சார்ந்திருக்கக்கூடிய பிரதிநிதிகளாகிய நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தெரிவித்து, அதற்கான தீர்வுகளையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு சங்கத்தையும் தனி தனியாக இங்கு குறிப்பிடாவிட்டாலும், உங்கள் கருத்துக்களையெல்லாம் நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம்.. நிச்சயமாக, உறுதியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் நாங்கள் கலந்துபேசி, உங்கள் மாவட்ட நிர்வாகம் மூலமாக படிப்படியாக அவற்றை நிறைவேற்றித் தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்த நம்பிக்கையோடு வந்தீர்களோ அந்த நம்பிக்கையோடு செல்லுங்கள், அந்த நம்பிக்கையோடு காத்திருங்கள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நிச்சயமாக நாங்கள் இருப்போம் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி, அதே நேரத்தில் ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலை எப்படி இருந்தது என்று உங்களுக்குத் தெரியும், எவ்வளவு கடுமையான சூழ்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம், கரோனா ஒரு பக்கம், நிதிநிலை ஒரு பக்கம். இதையெல்லாம் சமாளித்து ஓரளவு பணி செய்து கொண்டிருக்கிறோம். அறிவித்த எல்லா திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லவில்லை. இன்னும் சில திட்டங்கள் மீதம் இருக்கின்றன. அதையும் நிறைவேற்றக்கூடிய சூழ்நிலையில் தான் எங்களுடைய பணி அமைந்திருக்கிறது. அரசு எதை எதை செய்யுமோ, எதை எதை செய்ய முடியுமோ அதைத்தான் செய்வார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு, நீங்கள் காத்திருங்கள், உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக, படிப்படியாக, உறுதியாக நிறைவேற்றப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x