

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாலை மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க குப்பையில்லா சாலைகள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 15 மண்டலங்களில் 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அங்கு, மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள்அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மொத்தம் 66 கி.மீ. நீளமுடைய இந்த 18 சாலைகளில், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளை பராமரிக்க 310 தூய்மைப் பணியாளர்கள் காலை, மாலை வேளைகளில் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 230 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 61 வாகனங்கள் மூலம் குப்பை அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குப்பையில்லா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சாலைகளில் குப்பைகொட்டிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து திடக் கழிவு மேலாண்மை விதிகளின் படி ரூ. 64,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.