

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து பாஜக தொண்டர்கள் சார்பில் பிரபுவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கிய அண்ணாமலை, பிரபுவின் 2 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுகொள்வதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பிரபுவை கொலை செய்த குற்றத்தில் கைதானவர்களில் ஒருவர் திமுக கவுன்சிலர், மற்றொருவர் அவரது மகன் போலீஸ்காரர். தற்போது பிரபுவின் சகோதரர் பிரபாகரன் மீண்டும் பணிக்குச் சென்றால், உள்ளூரில் வசிக்கும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரபுவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை முதல்வர் அளிக்க வேண்டும். பிரபுவின் மனைவிக்கு அரசுப் பணியும், ரூ.5 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், துணை பொதுச் செயலாளர் நரேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.