உதகை வனப்பகுதிகளில் பரவிய காட்டு தீ: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் மின் விநியோகம் ரத்து

உதகை வனப்பகுதிகளில் பரவிய காட்டு தீ: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் மின் விநியோகம் ரத்து
Updated on
1 min read

உதகை: உதகை அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதில், பல ஏக்கர் பரப்பிலான புல்வெளிகள் மற்றும் தாவர வகைகள் எரிந்து சாம்பலாகின.

நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் வனம் மற்றும் புல்வெளிகள் காய்ந்து சருகாகியுள்ளன வறட்சி காரணமாக ஆங்காங்கேகாட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உதகையை அடுத்த தீட்டுக்கல், ஹெச்.பி.ஃஎப், வேலி வியூ, கவர்னர் சோலை உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. விஷமிகள் சிலர் புல்வெளிக்கு தீ வைத்துள்ளனர். காற்று பலமாக வீசியதால், தீ மள மளவென பரவியுள்ளது.

நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்டது உதகை அருகே உள்ள கவர்னர்சோலை, பார்சன்ஸ்வேலி வனப்பகுதிகள். இங்கு, நேற்று பகல் 12 மணியளவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை விண்ணை நோக்கிஎழுந்து, எரிமலை வெடித்ததுபோல காட்சியளித்தது. இந்த காட்சி, உதகை நகரிலிருந்து தெளிவாக தெரிந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவிய காட்டுத்தீ, மலை முழுவதையும் எரித்து சாம்பலாக்கியது.

தீட்டுக்கல் பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டத்துக்குள் தீ பரவாமல் இருக்க ஏற்கெனவே தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்ததால், விவசாய நிலங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை நகர் முழுவதும் மின்சார விநியோகம் ரத்து செய்யப்பட்டது. வனம் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உதகை தீயணைப்புத் துறை அதிகாரி பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், ஒவ்வோர் இடத்திலும் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கவர்னர்சோலை, பார்சன்ஸ்வேலி பகுதிகளில் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.

இதனால், மரங்களில் கூடு கட்டியிருந்த கழுகு மற்றும் காகங்கள் வெப்பத்தால் மேலே பறந்தன. புகைமூட்டம் அதிகம் இருந்ததால், பறவைகள் மூச்சுத் திணறி கீழே விழுந்து இறந்தன. தீயை கட்டுப்படுத்தும் பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதேபோல, வேலி வியூ பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதால், உதகையிலிருந்து குன்னூர் சென்ற ரயிலும், குன்னூரில் இருந்துஉதகை வந்த ரயிலும் நிறுத்தப்பட்டன. தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், சுமார் ஒன்றரை மணி நேரம்தாமதமாக உதகை மற்றும் குன்னூருக்கு ரயில்கள் சென்றடைந்தன.

இதுதொடர்பாக நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் கூறும்போது, "பகல் 12 மணியளவில் கவர்னர்சோலை, பார்சன்ஸ்வேலி, சாண்டிநல்லா ஆகிய பகுதிகளில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

தீயை அணைக்கும் பணியில்100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். தீ எதனால்பரவியது என்பது குறித்தும், தீயால்ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்றார். இதேபோல, மசினகுடி அருகேவாழைத்தோட்டம் உள்ளிட்ட இடங்களிலும் காட்டுத்தீ ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in