இலங்கை தமிழர் முகாம் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

இலங்கை தமிழர் முகாம் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
Updated on
1 min read

சென்னை: இலங்கைத் தமிழர்களின் முகாம் தலைவர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 1983-ல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக, லட்சகணக்கான தமிழர்கள் அங்கிருந்து வந்து, தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்காக 29 மாவட்டங்களில், 106 முகாம்கள் அமைக்கப்பட்டு, 19,346 குடும்பங்களைச் சார்ந்த 58,245 பேர் வசித்து வருகின்றனர்.

2021-ல் முதல்வர் ஸ்டாலின்தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை, கல்வி உதவித்தொகை, துணிகள் மற்றும் பாத்திரங்கள் வழங்குவதற்கான தொகைகள் பன்மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டன. மேலும், ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் மானியம், இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

முகாம்களில் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமுதாய முதலீட்டு நிதி ரூ.75 ஆயிரத்தில் இருந்து, ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதற்காக ரூ.6 கோடி நிதி அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து சமூக நலத் திட்டங்களும், முகாம் வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் புதிதாகக் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.176 கோடியில், 3,510 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ரூ.10 கோடி, முகாம் பராமரிப்புச் செலவுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை மற்றும் சுய விருப்பத்துடன் தாயகம் திரும்புதல் போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகாண அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறுபிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பத்தூர், கரூர், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 9 முகாம்களின் தலைவர்கள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர் இளம்பரிதி ஆகியோர் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in