

சென்னை: சென்னையில் விம்கோ நகர்-விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்துகோயம்பேடு வழியாக விமானநிலையத்துக்கும், பரங்கி மலைக்கும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில், ஆலந்தூர்-நங்கநல்லூர் இடையே நேற்று சிக்னல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்குச் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
இதனால், இந்த வழித்தடத்தில் விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நீல வழித் தடத்தில் மாறி விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.
அதேபோல், விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி பச்சை வழித் தடத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர், எழும்பூர் வழியாகச் சென்னை சென்ட்ரலுக்கு செல்லவேண்டும்.
இந்த மாற்றங்களைத் தவிர இரண்டு வழித் தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வரப்பட்டன. இந்த திடீர் தடங்கல்களுக்காக வருந்துவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது.
அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்லும் காலை நேரத்தில் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பச்சை மற்றும் நீலவழித் தடத்தில் இயங்கக் கூடியரயில்கள் ஆங்காங்கே 10 முதல் 15 நிமிடம் வரை நிறுத்தி இயக்கப்பட்டன.
இதனால், சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, டிஎம்எஸ்,நந்தனம், கிண்டி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.